உத்தரப் பிரதேசத்தில் சீருடை அணியாததால் சிறுமியை அடித்து பள்ளியை விட்டு வெளியேற்றிய அவலம் நிகழ்ந்துள்ளது.
அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் தலித் மாணவியிடம் சீருடை அணியாதது குறித்து முன்னாள் கிராமத் தலைவர் மனோஜ் குமார் துபே விசாரித்துள்ளார்.
அதற்கு அந்த மாணவி தனது தந்தை வாங்கித்தரும்போது அணிந்து கொள்வதாகப் பதிலளித்தார்.
அதைக் கேட்டு ஆத்திரமடைந்த துபே, அங்கேயே மாணவியை அடித்து, சாதியைப் பற்றிக் கூறி பள்ளியை விட்டு வெளியேற்றியுள்ளார்.
துபே அதிகாரியோ அல்லது ஆசிரியரோ கிடையாது. முன்னாள் கிராமத் தலைவர் தான். இருப்பினும் அவர் தினமும் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்வது வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இதையடுத்து சிறுமி பெற்றோரிடம் புகார் கூறியதையடுத்து, முன்னாள் கிராமத் தலைவர் மனோஜ் குமார் துபே மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததாக சௌரி காவல் நிலையப் பொறுப்பாளர் கிரிஜா சங்கர் யாதவ் தெரிவித்தார்.
மேலும், குற்றவாளிகளைப் பிடிக்கத் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என்றார்.