பழம்பெரும் திரைப்பட பாடகி லதா மங்கேஷ்கர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் (92) கடந்த ஜனவரி 8-ம் தேதி மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளபோதிலும் செயற்கை சுவாசக் கருவியின் உதவியில்லாமல் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் கடந்த ஜனவரி 29-ம் தேதி மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதையும் படிக்க | லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் பின்னடைவு
இதைத் தொடர்ந்து, அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் மீண்டும் செயற்கை சுவாசக் கருவி உதவியுடனே சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
இந்த நிலையில், அவர் இன்று காலை காலமானார்.
லதா மங்கேஷ்கர் 13 வயதில் பாடல்கள் பாடத் தொடங்கினார். 1942-இல் முதல் பாடலைப் பதிவு செய்தார். பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். தமிழில் வளையோசை உள்ளிட்ட நிறைய பாடல்களைப் பாடியுள்ளார்.
இவர் 1969-இல் பத்ம பூஷண், 1999-இல் பத்ம விபூஷண், 2001-இல் பாரத் ரத்னா விருதுகளைப் பெற்றுள்ளார். திரைத் துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் இவர் பெற்றுள்ளார்.