புணேவில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் வருகை குறைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனினும் பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் என்றும், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்துவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதேபோன்று புதியவகை கரோனாவான ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 1,892 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிக அளவு கரோனா பாதிப்பு பதிவாகும் மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. இந்நிலையில் புணேவில் மழைக்கால விடுமுறை முடிந்து புத்தாண்டில் இன்று முதல்முறையாக பள்ளிகள் திறக்கப்பட்டன.
முதல் நாளான இன்று பள்ளிக்கு மாணவர்கள் வருகை குறைவாகவே இருந்துள்ளது. முதல் நாள் என்பதால்தான் மாணவர்கள் வருகை குறைவாக இருந்துள்ளதாகவும், அடுத்தடுத்த நாள்களில் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகளில் 30 முதல் 40 சதவிகிதம் வருகை மட்டுமே பதிவானதாகவும், இதனால் 8 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு அடுத்த சில நாள்களுக்கு பாடம் நடத்தும் திட்டமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.