உண்மையான ஹிந்துத்துவவாதி காந்தியடிகளை கொன்றிருக்க மாட்டார் என்றும், முகமது அலி ஜின்னவையே கொன்றிருப்பார் எனவும் சிவசேனை கட்சித் தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ரெளத் விமர்சித்துள்ளார்.
காந்தியை ஹிந்து அமைப்பைச் சேர்ந்த நாதுராம் கோட்சே சுட்டுக்கொன்றது குறித்த ராகுல் காந்தியின் சுட்டுரைக்கு பதிலளித்து சஞ்சய் ரெளத் இந்த கருத்தை தெரிவித்தார்.
ஹிந்துத்துவவாதி காந்தியை சுட்டுக்கொன்றார். அனைத்து ஹிந்துத்துவவாதிகளும் காந்தி இல்லை என்று நினைத்துக்கொண்டுள்ளனர். ஆனால் உண்மை என்னவெனில், உண்மை உயிரோடு இருக்கும் இடத்தில் காந்தி உயிர்ப்போடு உள்ளார் என்று ராகுல் காந்தி தமது சுட்டுரையில் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சிவசேனை கட்சித் தலைவர் சஞ்சய் ரெளத், உண்மையான ஹிந்துத்துவவாதி பாகிஸ்தானை உருவாக காரணமான முகமது அலி ஜின்னாவையே கொன்றிருப்பார். காந்தியை அல்ல என்று கூறினார்.
1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி ஹிந்து மகாசபையின் உறுப்பினரும், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவருமான நாதுராம் கோட்சே, தில்லி பிர்லா இல்லத்தில் வழிபாட்டை முடித்துவந்த காந்தியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.