கேரளத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கேரளத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்மாநில மருத்துவமனைகளில் தொற்று தொடர்பான சோதனைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கடந்த ஜூலை 19 ஆம் தேதி இரண்டாவதாக ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒருவர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
இதனால், இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.
இது தொடா்பாக சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் செய்தியாளர்களிடம், ‘மலப்புரத்தைச் சோ்ந்த 35-வயதான நபா் கடந்த ஜூலை 6-ஆம் தேதி துபையில் இருந்து கேரளம் வந்துள்ளாா். பின், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டவரை சோதனை செய்தபோது அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதியானது. இப்போது சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது உடல்நிலை சீராகவே உள்ளது. அவருடன் நெருக்கமாக இருந்த அனைவரும் கண்காணிப்பில் உள்ளனா்’ எனத் தெரிவித்துள்ளார்.