ஜூலை 15-ல் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்று தேர்வெழுதிய  10ம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எப்போது  வெளியாகும் என்பது இன்னமும் மூடுமந்திரமாகவே இருக்கிறது.
எப்போதுதான் வரும் தேர்வு முடிவுகள்? சிபிஎஸ்இ நிர்வாகம் மௌனம் கலைக்கலாமே?
எப்போதுதான் வரும் தேர்வு முடிவுகள்? சிபிஎஸ்இ நிர்வாகம் மௌனம் கலைக்கலாமே?

புது தில்லி: சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்சிஇ ஆகிய பாடத்திட்டங்களில் பயின்று தேர்வெழுதிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிப்பதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

விடைத்தாள்களை மதிப்பிடும் முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புத்தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்று தேர்வெழுதிய பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எப்போது  வெளியாகும் என்பதை முறைப்படி சிபிஎஸ்இ நிர்வாகமே அறிவித்தால் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் இல்லாமல் மாணவ, மாணவியரால் இருக்க முடியும். 

கரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த கல்வியாண்டில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பருவத் தேர்வுகள் மூலம் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது.

இதன் காரணமாக, இரண்டு பருவத் தேர்வுகளில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் மற்றும் பள்ளிகள் வழங்கும் உள்ளீட்டு மதிப்பெண் போன்றவற்றை கணக்கிலெடுத்து அவற்றை கூட்டி ஒரே மதிப்பெண் பட்டியலில் வெளியிடுவது அல்லது இரண்டாம் பருவத் தேர்வில் எடுத்த மதிப்பெண்ணை தற்போது வெளியிட்டு, பள்ளிகளில் ஒன்றிணைந்த மதிப்பெண் பட்டியல் வெளியிடுவது போன்ற பல்வேறு செயல்களில் சிபிஎஸ்இ நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இதுபோன்ற புதிய மற்றும் சிக்கலான பணிகள் காரணமாக சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் மேலும் தாமதம் நீடிக்கிறது. இந்த தாமதத்தால்,  கல்லூரிகளில் சேர்க்கையிலும் சிபிஎஸ்இ  மாணவர்களுக்குச் சிக்கல் எழுந்துள்ளது. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற  கேள்வியோடுதான் தினந்தோறும் சிபிஎஸ்இ மாணவர்கள் கண்விழிக்கிறார்கள்.

ஆனால், இதுவரை அது தொடர்பாக அதிகாரப்பூர்வ தேதி எதுவும் வெளியிடப்படவில்லை. பல ஊடகங்களும் இந்த தேதியில் தேர்வு முடிவுகள் வெளியாகுமா? இந்த தேதியில் வெளியாகலாம் என்று கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. ஜூலை 15 எனத் தற்போது பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைத் தொடங்குவதிலும் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களும் வரப்பெற்று வருகிறது. எனவே, எப்போது தேர்வு முடிவு வெளியாகும், ஏன் காலதாமதமாகிறது, எந்த வாரத்தில் தேர்வு முடிவு வெளியாக வாய்ப்பிருக்கிறது என்பதை சிபிஎஸ்இ நிர்வாகமே தனது மௌத்தைக் கலைத்து வெளியிடலாமே.. பல சந்தேகங்களுக்கும் குளறுபடிகளுக்கும் குழப்பங்களுக்கும் நிச்சயம் தீர்வு கிட்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com