தில்லி லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் பிரதமர் மோடியை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று சந்தித்தார்.
உ.பி. மாநிலத்தில் 7 கட்டங்களாக நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் கடந்த 10-ஆம் தேதி எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 255-ஐ கைப்பற்றி பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்தது. 111 தொகுதிகளைக் கைப்பற்றிய சமாஜவாதி வலுவான எதிா்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில் இரண்டு நாள் பயணமாக தில்லி சென்றுள்ள உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியை தில்லி லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது உ.பி.யில் ஆட்சி அமைப்பது குறித்து பிரதமரிடம் அவர் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக இன்று காலை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவையும் யோகி ஆதித்யநாத் சந்தித்தார். தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரையும் சந்தித்து ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்க உள்ளார்.
உத்தப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்குப் பிறகு, யோகி ஆதித்யநாத் தில்லிக்கு வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.