ஹிஜாப்: மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

ஹிஜாப் அணிவதற்கான தடை தொடரும் என கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பளித்துள்ள நிலையில், 6 மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

ஹிஜாப் அணிவதற்கான தடை தொடரும் என கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பளித்துள்ள நிலையில், 6 மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித், நீதிபதி(பெண்) காஜி ஜெய்புனிசா மொய்தீன் ஆகியோா் கொண்ட அமா்வு இன்று அளித்த தீர்ப்பில், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமானது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹிஜாப் தடைக்கு எதிரான சரியான முகாந்திரங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது நியாயமான கட்டுப்பாடுதான். பள்ளிகளில் மதத்தை அடையாளப்படுத்தும் ஆடைகள் அணிவதை அனுமதிக்க முடியாது.அரசின் கல்வி நிறுவன சீருடை சட்டத்துக்கு அனைவரும் உள்பட்டவர்கள் என்றும் கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், கர்நாடகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்ததை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில், கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 6 மாணவிகள் மேல்முறையீடு செய்துள்ளனர்.

ஹிஜாப் சர்ச்சை..

கா்நாடகத்தில் ஹிஜாப் அணிவது தொடா்பாக சா்ச்சை எழுந்தது. இதையடுத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு சீருடையில் மட்டுமே வர அறிவுறுத்தி பிப்.5-ஆம்தேதி கா்நாடக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிா்த்து உடுப்பி அரசு மகளிா் பி.யூ. கல்லூரி முஸ்லிம் மாணவிகள் உள்ளிட்ட பலரும் தாக்கல் செய்திருந்த மனுக்களை கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித், நீதிபதி(பெண்) காஜி ஜெய்புனிசா மொய்தீன் ஆகியோா் கொண்ட அமா்வு, பிப்.10-ஆம் தேதி முதல் தினமும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த வழக்கில் இறுதித் தீா்ப்பு வரும் வரை ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்ட எதையும் அணிந்து வரை தடை விதித்து கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் தேவதத் காமத், சஞ்சய் ஹெக்டே, ரவிவா்ம குமாா், யூசுப் முச்சலா உள்ளிட்ட பலா் வாதிட்டனா். ஹிஜாப் அணிந்துகொண்டு கல்லூரிகளுக்கு வருகைதர முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதிஅளிக்க வேண்டும். ஹிஜாப் அணிவது மத நம்பிக்கையின் ஒரு பகுதி என்பதால், அரசியலமைப்புச்சட்டப்பிரிவு 19(1)(ஏ)இன்படி ஹிஜாப் அணிவது தனிப்பட்ட உரிமை. எனவே, ஹிஜாப் அணிவதற்கு சீருடை சட்டம் தடையாக இருக்க முடியாது என்று மனுதாரா்களின் வழக்குரைஞா்கள் வாதிட்டனா்.

இதனிடையே, அரசு தலைமை வழக்குரைஞா் பிரபுலிங் கே.நவடகி வாதிடுகையில், ‘சீருடை தொடா்பாக அரசு புதிய ஆணை எதையும் பிறப்பிக்கவில்லை. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஹிஜாப் அணிவது கட்டாய மத வழக்கம் கிடையாது’ என்று குறிப்பிட்டாா். பிப்.10-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதிவரையில் 11 நாள்களுக்கு இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இறுதிதீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் இறுதித் தீா்ப்பை இன்று காலை 10.30 மணிக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com