ஏழைகளுக்கு ஒரு இந்தியா, பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா என இரு இந்தியா உருவாகியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
குஜராத்தில் பழங்குடி மக்கள் அடிப்படை வசதிகளின்றி இருப்பதை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, குஜராத்தை ஆட்சி செய்ததைப் போன்றே பிரதமர் நரேந்திர மோடி நாட்டையும் ஆட்சி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் பழங்குடியினர் சத்யாகிரகம் என்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேரணியைத் தொடக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர்,
குஜராத்தில் பழங்குடி மக்களுக்கு போதிய வசதிகளை செய்துகொடுக்காமல் மோடி அரசு ஏமாற்றியுள்ளது. பழங்குடி மக்கள் தங்களுடைய தேவைகளை தாங்களே நிறைவேற்றிக்கொள்கின்றனர். ஆனால், அவர்களுக்கு அரசு சார்பில் எந்த நலத்திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.
நாட்டை இரண்டாக பிரித்து பணக்காரர்களுக்கு ஒரு நாடு, ஏழைகளுக்கு ஒரு நாடு என பிரித்து ஆட்சி செய்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. குஜராத்தில் முதல்வராக இருந்தபோது ஆட்சி செய்ததைப் போன்றே தற்போது நாட்டையும் பிளவுபடுத்து ஆட்சி செய்கிறார்.
குஜராத்தில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை வென்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று குறிப்பிட்டார்.