மேற்குவங்க பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக மாநில முதல்வர் நியமனம் செய்யப்படுவதற்கான ஒப்புதலை மாநில அமைச்சரவை வழங்கியுள்ளது.
பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மற்றும் முதல்வருக்கிடையே மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் ஆளுநர் ஜெக்தீப் தன்கர் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது.
இதையும் படிக்க | மேற்கு வங்காள கல்வி நிறுவனத்துக்கு ஸ்கோச் விருது
இந்நிலையில் மேற்குவங்கத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆளுநருக்கு பதிலாக மாநில முதல்வரை வேந்தராக நியமனம் செய்வதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மாநில கல்வித்துறை அமைச்சர் முன்மொழிந்த பரிந்துரையை அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளது. தொடர்ந்து நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சட்டம் இயற்றப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பிரதமர் மோடியை புறக்கணித்தாரா தெலங்கானா முதல்வர்?
இதன்மூலம் நாட்டில் பல்கலைக்கழக வேந்தராக மாநில முதல்வரை நியமிக்கும் முதல் மாநிலமாக மேற்குவங்கம் மாறியுள்ளது. ஆளுநரை ஆலோசிக்காமல் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர் நியமனம் செய்யப்படுவதாக கடந்த ஆண்டு எழுந்த சர்ச்சையை அடுத்து ஆளுநர்-முதல்வர் இடையேயான மோதல் தீவிரமடைந்தது குறிப்பிடத்தக்கது.