பிகார் மாநிலத்தில் உள்ள பதிவு செய்யப்படாத கோயில்கள், மடங்கள் மற்றும் அறக்கட்டளைகளை என 4000-க்கும் மேற்பட்ட அமைப்புகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் பதிவு செய்வதை உறுதி செய்யுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு பிகார் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பிகார் சட்ட அமைச்சர் ஷமிம் அகமது கூறுகையில்,
மாநிலத்தில் உள்ள பல கோயில்கள் மற்றும் மடங்களின் அர்ச்சகர்கள் நிலத்தை மாற்றி அல்லது விற்பனை செய்ததில் பெரிய அளவிலான முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
பிகார் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட கோயில்கள் மற்றும் மடங்களின் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்க, மாநிலத்தில் உள்ள அனைத்து பதிவு செய்யப்பட்ட கோயில்களுக்கும் வேலி அமைக்கும் பணியை பிகார் அரசு விரைவில் தொடங்கும்.
பிகாரில் உள்ள அனைத்து பொது கோயில்கள், மடங்கள் அறக்கட்டளைகள் மற்றும் தர்மசலாக்கள் பிகார் இந்து மத அறக்கட்டளை சட்டம் 1950 இன் படி பிஎஸ்பிஆர்டி-யில் பதிவு செய்யப்பட வேண்டும்.
அந்தந்த மாவட்டங்களில் பதிவு செய்யப்படாத அனைத்து அமைப்புகளும் மூன்று மாதங்களுக்குள் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் கூறினார்.
பதிவு செய்யப்படாத கோயில்கள், மடங்கள் மற்றும் அறக்கட்டளைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்யத் தவறினால், மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
35 மாவட்டங்களில் பிஎஸ்பிஆர்டி-ஆல் தொகுக்கப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, மாநிலத்தில் சுமார் 4055 பதிவு செய்யப்படாத கோயில்கள் மற்றும் மடங்கள் உள்ளன, மேலும் அவை 4400 ஏக்கருக்கும் அதிகமானவை என்று அவர் கூறியுள்ளார்.