
விபத்துக்குள்ளான தொங்கு பாலம்
தொங்கு பாலம் விபத்து ஏற்பட்ட மோர்பி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருக்கு மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பளிக்கவில்லை.
குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டமாக டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தில்லி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இந்த பட்டியலில், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஹர்திக் படேல், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா உள்ளிட்டோரின் பெயர் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், மோர்பி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருக்கும் பிரிஜேஷ் மெர்ஜாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மோர்பி முன்னாள் எம்எல்ஏ காண்டிலால் அம்ருதியா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | பாஜக வேட்பாளராக களமிறங்கும் ஜடேஜாவின் மனைவி!
தொங்குபாலம் விபத்து ஏற்பட்ட போது ஆற்றில் குதித்து உயிருக்கு போராடியவர்களை காண்டிலால் மீட்பது போன்ற விடியோ சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
குஜராத் மாநிலம் மோா்பியில் உள்ள மச்சு நதியின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம், கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 135 போ் உயிரிழந்தனா். 100 பேர் காயமடைந்தனர். தொங்கு பாலத்தை சரியாக சீரமைக்காததே காரணம் என்று தனியார் நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G