தில்லியைத் தொடர்ந்து மே.வங்கத்திலும் கொடூரக் கொலை
தில்லியில் ஷ்ரத்தா வால்கர் கொலை செய்யப்பட்டது போன்று மேற்கு வங்கத்தில் கொடூரமான கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.
தில்லியில் ஷ்ரத்தா வால்கர் என்ற பெண் தனது காதலன் அஃப்தாப் என்ற இளைஞரால் 35 துண்டுகளாக வெட்டிக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் முன்னாள் கப்பற்படை வீரர் ஒருவர் அவரது சொந்த மகனால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: காவல் துறையினர் முன்னாள் கடற்படை வீரரான உஜ்வால் சக்கரபோர்த்தி மனைவி மற்றும் மகனை கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்ட அந்த சக்கரபோர்த்தியால் தொடர்ச்சியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. சக்கரபோர்த்தியின் மகன் பாலிடெக்னிக் படித்து வருகிறார். இந்த சம்பவத்தன்று தனது தேர்வுக்காக அப்பாவிடம் பணம் கேட்டுள்ளார் மகன். அதனைத் தர மறுக்கவே சக்கரபோர்த்தி அவரது மகனால் தள்ளி விடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் அருகில் உள்ள நாற்காலியில் மோதி அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின், தந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார் மகன்.
கொலை செய்யப்பட்ட தந்தையின் உடலை கழிப்பறையில் வைத்து 6 துண்டுகளாக வெட்டியுள்ளார். பின்னர், தந்தையின் உடல் பாகங்களை பிளாஸ்டிக் பையில் வைத்து வெவ்வேறு இடங்களில் புதைத்துள்ளார். அதற்காக அவர் 6 முறை தனது மிதிவண்டியில் சென்றதாக கூறப்படுகிறது. தற்போது கொலை செய்யப்பட்ட சக்கரபோர்த்தியின் இரண்டு கால்கள் குப்பைகளுக்கு நடுவில் இருந்தும், தலை மற்றும் வயிறுப் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள அவரது உடல் பாகங்களை தேடும் பணியில் காவல் துறை தீவிரமாக இறங்கியுள்ளது என்றார்.
இதையும் படிக்க: லோகேஷ் சினிமாடிக் யுனிவர்சில் ‘தளபதி 67’?: வெளியான புதிய தகவல்!
ஷ்ரத்தா வால்கர் என்ற இளம்பெண் அவரது காதலனால் 35 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டு தில்லியின் பல பகுதிகளிலும் வீசிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.