தீபாவளியையொட்டி ஊழியர்களுக்காக கார், இருசக்கர வாகனம் முதலானவற்றை நகைக்கடை உரிமையாளர் ஒருவர் பரிசாக வழங்கியுள்ளார்.
பண்டிகை காலத்தையொட்டி தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உழைத்ததால், அவர்களுக்கு இந்த பரிசை வழங்கியதாக நிறுவன உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெயந்தி லால். இவர்
சல்லானி ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். ஓணம், ஆயுதபூஜை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகளைத் தொடர்ந்து நகை வியாபாரம் சிறப்பாக நடந்துள்ளது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பரிசாக வழங்கியுள்ளார்.
தனது நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களில் 8 பேருக்கு காரும், 18 பேருக்கு இருசக்கர வாகனமும் பரிசாக அளித்துள்ளார்.
எனது ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் பணிகளை அங்கீகரிக்கும் வகையிலும் இந்த பரிசை வழங்குவதாக ஜெயந்தி லால் தெரிவித்தார். குறுகிய இடைவெளியில் பண்டிகை நாள்களில் கூடுதலாக உழைத்த தனது ஊழியர்களால் லாபம் கிடைத்ததாகவும், என்னுடைய எல்லா ஏற்ற இறக்கங்களிலும் உடன் பயணித்தவர்களுக்காக நான் செய்யும் சிறிய நன்றிக்கடன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தீபாவளி பரிசாக தனது ஊழியர்களுக்கு ரூ.1.2 கோடி பரிசு பொருள்களை ஜெயந்தி லால் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.