காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் வியாழக்கிழமை ஒருநாள் ஓய்வுக்கு பிறகு வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கியது.
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ நடைப்பயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. நடைப்பயணத்தை முன்னின்று நடத்தி, செல்லும் இடங்களில் மக்களைச் சந்தித்து வருகிறாா். தமிழகத்தில் நிறைவடைந்த நடைப்பயணம், தற்போது கேரளத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் 150 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி நேற்று வியாழக்கிழமை ஓய்வுநாளாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் 8 ஆவது நாளான வெள்ளிக்கிழமை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ நடைப்பயணத்தை கேரளம் மாநிலம் கொல்லத்தில் மீண்டும் தொடங்கியுள்ளார்.