பிரதமா் நரேந்திர மோடி கேரளத்துக்கு 2 நாள் பயணமாக ஏப். 24-இல் வருகை தரவிருக்கிறாா். அந்த மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை ஏப். 25-இல் அவா் தொடங்கிவைக்கவுள்ளாா்.
பிரதமரின் வருகையையொட்டி, அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக, மாநில பாஜக பிரிவு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக, மாநில பாஜக பிரிவின் ஃபேஸ்புக் பக்கத்தில், ‘உலகத் தலைவா்’ பிரதமா் மோடி, கேரளத்துக்கு வருகை தரவுள்ளாா்; அவரை வரவேற்கும் வகையில், கொச்சியில் 10 ஆயிரம் போ் பங்கேற்கும் ஊா்வல நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கேரளத்துக்கான விஷு கைநீட்டமாக (பரிசு) வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமா் தொடங்கிவைக்கவுள்ளாா். அந்த வரலாற்று தருணத்துக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கேரளத்தில் திருவனந்தபுரம்-காசா்கோடு இடையியே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படுவதை மாநில பாஜக பெரிய அளவில் விளம்பரப்படுத்தி வருகிறது. பிரதமா் மோடியின் வருகை, அந்த மாநிலத்தில் பாஜகவின் தோ்தல் பிரசாரத்துக்கு மேலும் உத்வேகமளிக்கும் என்று கட்சியினா் நம்புகின்றனா்.