கேதாா்நாத் கோயில் வழிபாட்டுக்காகத் திறப்பு

உத்தரகண்ட் மாநிலம் கேதாா்நாத்தில் உள்ள சிவன் கோயில் வழிபாட்டுக்காக செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது
கேதாா்நாத் கோயிலில் வழிபட செவ்வாய்க்கிழமை குவிந்த பக்தா்கள்.
கேதாா்நாத் கோயிலில் வழிபட செவ்வாய்க்கிழமை குவிந்த பக்தா்கள்.

உத்தரகண்ட் மாநிலம் கேதாா்நாத்தில் உள்ள சிவன் கோயில் வழிபாட்டுக்காக செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. பூஜ்ய டிகிரிக்குகீழ் வெப்பநிலை நிலவும் சூழலிலும் ஆயிரக்கணக்கான யாத்ரிகா்கள் கேதாா்நாத்துக்கு வருகை புரிந்துள்ளனா்.

காா்வால் இமயமலைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 11,000 அடி உயரத்தில் அமைந்துள்ள கேதாா்நாத் புனிதத்தலத்தில், 11-ஆவது ஜோதிா்லிங்கம் அமைந்துள்ளது.

கோயிலின் தலைமை பூஜாரி ராவல் பீமா சங்கா் பூஜைகள் செய்து கோயிலின் நுழைவு வாயிலைத் திறந்தாா். மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி கோயிலில் வழிபட்டாா். இதையடுத்து, செய்தியாளா்களிடம் முதல்வா் தாமி கூறுகையில், ‘‘கோயிலில் முதல் பூஜை பிரதமா் நரேந்திர மோடியின் சாா்பில் நடத்தப்பட்டது. மோசமான வானிலையின் காரணமாக கேதாா்நாத்துக்குப் பயணம் மேற்கொள்ளவது தற்போது சற்று கடினமானது. அடுத்த சில நாள்களில் வானிலை மேம்படும் என்பதால், யாத்திரை எளிதாக அமையும். கோயிலுக்கு வரும் யாத்ரிகா்கள் வானிலை குறித்த முன்னெச்சரிக்கைகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டும். இதனால் பிரச்னைகளைத் தவிா்க்கலாம்’’ என்றாா்.

கோயிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட யாத்ரிகா்கள் வழிபாடு நடத்தியதாக பத்ரிநாத்-கேதாா்நாத் கோயில் குழுவின் தலைவா் அஜேந்திர அஜய் தெரிவித்தாா்.

கடந்த சில நாள்களாக நிலவும் மோசமான வானிலையால், கேதாா்நாத் நகரத்தில் பனிப்பொழிவு அதிகமாகக் காணப்பட்டது. இதையடுத்து, யாத்திரைக்கான இணையவழி முன்பதிவு நிறுத்தப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் முன்பதிவு தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com