குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தூங்கிய நகராட்சி முதன்மை அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கட்ச் மாவட்டத்தின் பூஜ் நகராட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதரத்தை இழந்த 14 ஆயிரம் பேருக்கு மறுவாழ்வு ஏற்படுத்தும் விதமாக அவர்களுக்கான வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பூஜ் நகராட்சி முதன்மை அலுவலர் ஜிகார் படேல் தூங்கியது கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: பணி நேரத்தில் அலட்சியமாக நடந்து கொண்டதால் குஜராத் சிவில் சர்விஸ் சட்டம் 1971 சட்டவிதி 5(1)(a)-ன் கீழ் ஜிகார் படேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனக் கூறியுள்ளனர்.
இந்த நிகழ்வில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பேசியதாவது: 2001 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு வசதிகள் பெரிய அளவில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கட்ச் மாவட்டத்தின் மீது தனி பிரியம் வைத்துள்ளார். அவரது வழிகாட்டுதலின் கீழ் கட்ச் மாவட்டம் பல கடினமான தருணங்களில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றார்.