சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தில்லி அதிகாரியை கைது செய்ய வலியுறுத்தி காவல்துறைக்கு தில்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தில்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் துணை இயக்குநர் பதவியில் இருக்கும் அரசின் மூத்த அதிகாரி ஒருவர், இறந்த தனது நண்பரின் மகளை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இதில், 12 ஆம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமி கர்ப்பமடைந்தது தெரிந்து அதிகாரியின் மனைவி, சிறுமியின் கர்ப்பத்தைக் கலைக்க மருந்து கொடுத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
தந்தை இறந்த பிறகு சிறுமி, தந்தையின் நண்பரான அதிகாரியின் வீட்டில் தங்கியுள்ளார். கடந்த 2020, நவம்பா் மற்றும் 2021 ஜனவரி -க்கு இடையில் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது.
இதில் அதிகாரியின் மீது கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி புராரி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்டவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள தில்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால், அவரை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தில்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேலும், 'பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் வேலையில் இருந்துகொண்டு பெண்களையே வேட்டையாடும் மிருகமாக மாறினால், பெண்கள் எங்கே போவார்கள்!' என்றும் ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளார்.