தெலங்கானா முதல்வராக பதவியேற்றுள்ள ரேவந்த் ரெட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற காங்கிரஸ், ரேவந்த் ரெட்டி தலைமையில் இன்று ஆட்சி அமைத்தது.
முதல்வராக ரேவந்த் ரெட்டி, துணை முதல்வராக மல்லு பாட்டி விக்ரமார்கா மற்றும் 9 அமைச்சர்களுக்கு மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில், தெலங்கானா முதல்வராக பதவியேற்றுள்ள ரேவந்த் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் நலனுக்காக என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் தருவேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.