மராத்தா சமூக மக்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் பிப்ரவரி மாதம் வரை காத்திருக்க மாட்டோம் என்று மனோஜ் ஜரங்கே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் உள்ள 30 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட மராத்தா சமூகத்தினர் கல்வி மற்றும் அரசு வேலைகளுக்கு இடஒதுக்கீடு கோரி வருகின்றனர்.
மராத்தா சமூக ஆர்வலர் மனோஜ் ஜரங்கே, வரும் டிசம்பர் 24ஆம் தேதிக்குள் மராத்தா சமூகத்துக்கான இடஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கெடு விதித்துள்ளார்.
இதுகுறித்து ஜல்னா மாவட்டத்தில் அவர் செவ்வாய்க்கிழமை பேசியதாவது, “இட ஒதுக்கீட்டுக்காக நாங்கள் பிப்ரவரி வரை காத்திருக்க மாட்டோம். மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக தெளிவாக சட்டமியற்றாவிடில் டிச. 24-ஆம் தேதி முதல் போராட்டத்தை தொடங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
எனவே வரும் டிசம்பர் 24-ஆம் தேதிக்குள் அனைத்து மராத்தா சமூக மக்களுக்கும் இதர பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட வேண்டும்.” என்று கூறினார்.
மேலும் போராட்டம் குறித்த திட்டம் டிசம்பர் 23-ஆம் தேதி பீட் பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க | இனி அரசு பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணியலாம்: அமைச்சர் அன்பில் மகேஸ்
முன்னதாக, நவம்பர் மாதம் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பேசிய அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இதுதொடர்பாக சட்டம் இயற்றுவதற்கு கால அவகாசம் தரப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.