வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு மாற்றே இல்லை என்று மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்தார்.
வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மோடியின் தலைமைக்கு சவால் விடுக்கும் வகையில் ஒன்றிணைந்துள்ள எதிர்க்கட்சிகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணிக்கு எதிரான பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிதான் என்று கூறினார்.
இதையும் படிக்க | தெருநாய் கடித்து நான்கு மாத குழந்தை பலி!
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, “இப்போது நீங்கள் எதையுமே யூகிக்க வேண்டாம். நான் ஜோசியம் கூறுபவன் இல்லை. இருந்தாலும் தேர்தல் நெருங்குகையில் என்ன நடக்கும் என்பதை சொல்கிறேன். எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணிக்கு எதிரான பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியே ஆவார்.
பிரதமர் மோடிக்கு இணையானவர்களாக யாருமே இல்லை. தற்போது நாட்டில் மோடிக்கு மாற்றாக யாரும் கிடையாது. இந்திய தேசத்தின் பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமான மோடிதான்.” என்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் பாஜகவின் கையே ஓங்கியுள்ளது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று முக்கியமான இந்தி மாநிலங்களில் வெற்றியடைந்த பிறகு, 2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை எதிர்கொள்ளும் வகையில் பாரதிய ஜனதா கட்சி தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது என்று பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் முடிவடைந்த சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது, பாஜகவின் முக்கிய முகமாக பிரதமர் மோடியே நின்றார். எனவே மற்ற தலைவர்களை ஓரங்கட்டுவது குறித்த எந்தக் கவலையும் இருக்காது என்று கூறப்படுகிறது.