அயோத்தியில் கட்டப்பட்டிருக்கும் ராமர் கோயிலுக்கான திறப்பு விழா ஜன. 22 அன்று நடைபெறவுள்ளது. திறப்பு விழாக்கான அழைப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி மறுத்துள்ளார்.
இது குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, ராமரிடம் திரும்புவது என்பது அவரவர் விருப்பம் எனத் தெரிவித்துள்ளது.
சீதாராம், மதம் என்பது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது, அதனை அரசியல் ஆதாயத்துக்கான கருவியாக மாற்றக் கூடாது எனத் தெரிவித்து அழைப்பை மறுத்துள்ளார்.
பரிஷத் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “சீதாராம் எனப் பெயர் கொண்டவரே அயோத்திக்கு வர மறுக்கிறார் எனச் செய்தி கிடைத்தது. அரசியல் எதிர்நிலை ஏற்கக் கூடியதுதான். ஆனால் தன் பெயர் மேலேயே இவ்வளவு வெறுப்பு வைத்திருப்பதால் தான் அவர் கம்யூனிஸ்ட் போல. இது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும். நாடே ராமரிடமும் ராமத்துவத்துக்கும் திரும்பும்போது எத்தனை நாள் எதிர்ப்பீர்கள். அது உங்களின் விருப்பம். மக்கள் அதற்கேற்றாற்போல முடிவு எடுப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
1980-களில் இருந்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு ராமர் கோயில் இயக்கத்தை முன்னெடுத்து வருகிறது.