ராமர் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு ராமரால் அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே வருவார்கள் என்று மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் வரும் ஜனவரி 22-ஆம் தேதி ராமர் கோயிலுக்கான குடமுழுக்கு நிகழ்வு பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கு கோயில் கட்டும் கமிட்டியின் சார்பில் பல்வேறு முக்கியப் பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி இவ்வாறு கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை அவர் பேசியதாவது, “அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் ராமரால் அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு வருவார்கள்.” என்று கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத்தின் கருத்துக்கு மறைமுகமாக பதிலளிக்கும் விதமாகவே பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மீனாட்சி லெகி இவ்வாறு கூறியதாக கருதப்படுகிறது.
முன்னதாக, மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத், “மக்களின் மத உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் பாஜகவினர் மதத்தை அரசியலுடன் இணைக்கின்றனர். இது ஒரு மத நிகழ்ச்சி. இந்த மத நிகழ்ச்சியை பாஜகவினர் அரசியலாக்க முயற்சிக்கின்றனர். இது சரியல்ல. எனவே எங்கள் கட்சி இந்த விழாவில் கலந்துகொள்ளாது.
இதையும் படிக்க | வேங்கைவயல் ஓராண்டு நிறைவு: குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது எப்போது?
மதத்தையும், அரசியலையும் தனித்தனியாக வைக்க வேண்டும். இரண்டையும் கலப்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திட்டமாகும். மதத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவது மிகவும் தவறாகும். அரசியலுக்காக மதம் பயன்படுத்தப்படும்போது மதம் அதற்கான மரியாதையை இழக்கிறது.” என்று என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.