கர்நாடகா ரக்ஷன வேதிகே (நாராயண கௌடா பிரிவு) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெங்களூருவில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் கன்னடத்தில் இல்லாததாக கூறி சேதப்படுத்தினர்.
வணிகப் பகுதிகளாக இருக்கக்கூடிய பிரிகேட் சாலை, சாம்ராஜ்பேட்டை, சிக்பேட்டை, காந்தி நகர், கன்னிங்ஹாம் சாலை, எம்.ஜி.சாலை உள்ளிட்ட பெங்களூருவின் பல முக்கிய பகுதிகளில் இந்த அமைப்பினர் புதன்கிழமை பேரணி நடத்தினர்.
இதையும் படிக்க | மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுடன் ராகுல் காந்தி சந்திப்பு
வணிக நிறுவனங்கள் கர்நாடகத்தின் அதிகாரப்பூர்வ மொழியான கன்னடத்தை அவமதிப்பதாக குற்றம் சாட்டிய இவர்கள் அந்த நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை சேதப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினர்.
கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பினரின் இந்த நடவடிக்கையை பெங்களூரில் உள்ள பல வணிக வளாகங்கள், கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்கொண்டன.
கன்னட மொழியில் இல்லாத பெயர்ப்பலகைகள் மற்றும் அறிவிப்பு பலகைகளை அவர்கள் சேதப்படுத்தினர்.
பின்னர் நாராயண கௌடா உட்பட அந்த அமைப்பினர் அனைவரும் காவல்துறையால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயண கௌடா, “விதிமுறைகளின்படி 60 சதவீத பெயர்ப்பலகைகள் மற்றும் அறிவிப்பு பலகைகள் கன்னட மொழியில் இருக்க வேண்டும். நாங்கள் யாருடைய தொழிலுக்கும் எதிரானவர்கள் இல்லை. ஆனால் நீங்கள் கர்நாடகாவில் தொழில் செய்தால் கன்னட மொழியை மதித்தாக வேண்டும்.
இதையும் படிக்க | ரோட்டர்டம் திரைப்பட விழாவுக்கு தேர்வான விடுதலை!
கன்னட மொழியை நீங்கள் புறக்கணித்தாலோ அல்லது சிறிய எழுத்துகளில் அச்சிட்டாலோ உங்களை இங்கு தொழில் செய்ய விடமாட்டோம்.” என்று தெரிவித்தார்.