மனைவியை தாக்கியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் கிரிக்கெட் வீர் வினோத் காம்ப்ளி கடந்த 2014ம் ஆண்டு பாந்த்ராவில் உள்ள செயின்ட் பீட்டர் தேவாலயத்தில் ஆண்ட்ரியாவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் மும்பை, பாந்த்ரா புறநகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மதுபோதையில் வீட்டிற்கு சென்ற வினோத் காம்ப்ளி தனது மனைவி ஆண்ட்ரியாவை சமையல் பாத்திரம் கொண்டு தாக்கியுள்ளார்.
இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. உடனே சம்பவ இடத்தில் இருந்த அவர்களது 12 வயது மகன் தனது தந்தையை சமாதானப்படுத்த முயன்றுள்ளான். இருப்பினும், வினோத் காம்ப்ளி பேட்டையும் எடுத்து வந்து அவரது மனைவியை தாக்க முற்பட்டிருக்கிறார். பின்னர் காம்ப்ளியின் மனைவி தலையில் காயத்துடன் மருத்துவப் பரிசோதனைக்காக பாபா மருத்துவமனைக்கு சென்றார்.
இதையும் படிக்க- வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை: காவல்துறை
மேலும் இதுதொடர்பாக வினோத் காம்ப்ளி மீதும் அவர் மும்பை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வினோத் காம்ப்ளி, சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.