பேரிடர்களில் பாதிக்கப்பட்ட உலக நாடுகளுக்கு முதலில் உதவிக்கரம் நீட்டுவது இந்தியா என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
துருக்கி மற்றும் சிரியாவில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப். 20) கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது, ''இந்தியாவின் மீது உலக நாடுகளுக்கு நல்ல அபிப்ராயம் உள்ளது. உலகின் எந்த நாடு இயற்கை பேரிடரால் நிலைகுலைந்தாலும், முதலில் உதவிக்கரம் நீட்டும் நாடாக இந்தியா உள்ளது. நேபாள நிலநடுக்கம், இலங்கை பொருளாதாரப் பிரச்னை என எதுவாக இருந்தாலும் உதவுவதற்கு இந்தியா முதன்மையாக முன்வந்தது. தற்போது துருக்கி, சிரியாவில் நிகழ்ந்த நிலநடுக்க பேரிடரில் மீட்புப் பணிகளில் இந்தியா உதவியுள்ளது. இதனால், இந்திய மீட்புப் படையினர் மீதும் மற்ற நாடுகளின் மதிப்பு உயர்ந்துள்ளது’’ எனக் குறிப்பிட்டார்.
துருக்கி, சிரியாவில் கடந்த 6-ஆம் தேதி ஏற்பட்ட அடுத்தடுத்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் அந்நாடுகளுக்கு உதவும் வகையில், இந்தியாவிலிருந்து தேசிய மீட்புப் படையைச் சேர்ந்த 250 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர்.
தற்போது மீட்புப் பணிகளை முடித்து வீரர்கள் அனைவரும் சொந்த நாடு திரும்பியுள்ளனர்.