உத்தரப் பிரதேசத்தில் சிறுத்தைக்கு வைக்கப்பட்ட கூண்டில் இளைஞர் ஒருவர் சிக்கியிருந்த விடியோவை அம்மாநில வனத் துறை வெளியிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சஹார் மாவட்டத்திலுள்ள பாசேந்துவா கிராமத்தில் அடிக்கடி சிறுத்தையால் பொதுமக்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வனத் துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டிருந்தது.
மேலும், சிறுத்தைக்காக கூண்டில் சேவல் ஒன்று இரையாக வைக்கப்பட்டிருந்தது. வனத் துறையினர் தொடர்ந்து கூண்டை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், கூண்டில் வைக்கப்பட்டிருந்த சேவலை எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் சிறுத்தைக்காக வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கினார். கூண்டைத் திறக்க முடியாததால் இளைஞர் கூண்டில் இருந்தவாறு கதறினார். சத்தம் கேட்டு வந்த வனத் துறை கூண்டில் இருந்த நபரிடம் விசாரிக்கும்போது சிறுத்தைக்கு இரையாக வைக்கப்பட்டிருந்த சேவலை எடுக்க வந்தது தெரியவந்தது. இந்த விடியோவை அம்மாநில வனத் துறை வெளியிட்டுள்ளது.