அகமதாபாத்: குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர், கைப்பேசியில் பெண்ணுடன் விடியோ அழைப்பில் பேசியதால் ரூ.2.69 கோடியை இழந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி கைப்பேசியில் விடியோ கால் வந்துள்ளது. மோர்பியைச் சேர்ந்த ரியா ஷர்மா என்று அப்பெண் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிக்க.. உலகின் நீண்ட சொகுசுப் படகில் நாம் பயணிக்க முடியுமா? எவ்வளவு கட்டணம்?
இருவரும் விடியோ காலில் பேசிக் கொண்டிருந்த நிலையில், தொழிலதிபரின் சில அந்தரங்க விடியோக்களை பதிவு செய்து கொண்ட அப்பெண், அந்த விடியோ வெளியே வராமல் இருக்க ரூ.50 ஆயிரம் கொடுக்குமாறு மிரட்டியுள்ளார்.
பிறகு, ஒருவர் கைப்பேசியில் அழைத்து, தான் காவல்துறை ஆய்வாளர் என்றும், தன்னிடம் அவரது விடியோ இருப்பதாகவும் அதை வெளியிடாமல் இருக்க ரு.3 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
அடுத்த ஒரு சில நாள்களில், மற்றொருவர் அழைத்து, அப்பெண் தற்கொலைக்கு முயன்றதாகவும், உடனடியாக 80,97 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார்.
தொடர்ச்சியாக அவர் பணம் கொடுத்து ஏமாந்துள்ளார். பிறகு சிபிஐ அதிகாரி என்று பொய்யான பெயரில் ஒருவர் அழைத்துள்ளார். பெண்ணின் தாயாருக்குக் கொடுக்க ரூ.8.5 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
இப்படியே பணம் பறித்துக் கொண்டிருந்ததால், ஜனவரி 10ஆம் தேதி சைபர் கிரைம் காவல்துறையை நாடிய அந்த தொழிலதிபர், இப்படியே ரூ.2.69 கோடியை அவர் இழந்திருப்பதாகப் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, இதுபோன்ற மோசடி அழைப்புகளிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.