ஹைதராபாத்: தனது கார் ஓட்டுநரைக் கொன்றுவிட்டு, தான் இறந்தது போல நாடகமாடிய அரசு ஊழியர், தனது கைப்பேசி மூலமே சிக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தெலங்கானா அரசு ஊழியர் தர்மா (48). தெலங்கானா அரசுத் தலைமைச் செயலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் எரிந்த நிலையில், காரில் கண்டெடக்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவர் உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு வாரத்துக்கு முன்பு, மேதக் மாவட்டத்தில் அவரது எரிந்த கார் நின்று கொண்டிருந்தது. அதில், ஒரு உடல் எரிந்த நிலையில் இருந்தது. அந்த உடலுடன் இருந்த பையில் தர்மாவின் அடையாள அட்டைகள் இருந்துள்ளன. இதனைக் கொண்டு மர்ம மரணம் என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
காரின் எண்ணை வைத்து அது தர்மாவினுடையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் எரிந்த உடல் தர்மாவினுடையது என்றும் காவல்துறையினர் கருதினர்.
இந்த நிலையில்தான், விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், தர்மாவின் செல்லிடப்பேசி கோவாவிலிருந்து இயங்கியதை கண்டுபிடித்தனர். அங்கு நேரில் சென்று பார்த்த போது தர்மா உயிரோடு இருந்தார். அவர் கைது செய்யப்பட்டு ஹைதராபாத் அழைத்து வரப்பட்டார்.
விசாரணையில், பந்தயத்தில் நிறைய ஏமாந்ததால் கடன் அதிகமாகியதாகவும், அதனை அடைக்க, தனது கார் ஓட்டுநரைக் கொன்று தானே இறந்ததாக நாடகமாடி, காப்பீட்டுத் தொகையை பெற்று கடனை அடைக்க முடிவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.