கேரளம் முழுவதும் கனமழை நீடித்து வரும் நிலையில், 11 மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஜூலை 7) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கேரளத்தில் கனமழை நீடித்து வருகிறது.
தொடர் மழை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. பல பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால், மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், நதியோரங்கள் மற்றும் மலைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் முதல்வா் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோழிக்கோடு, பாலக்காடு, கொல்லம், திருச்சூர், ஆலப்புழா, கண்ணூர், காசர்கோடு ஆகிய 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று வியாழக்கிழமை (ஜூலை 7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சூர், மலப்புரம் பகுதிகளில் கனமழையுடன் சூறாவளிக்காற்று வீசியதில் மரங்கள், மின்கம்பங்களில் விழுந்த பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இடுக்கி மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கையும், திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையும், மற்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், விடுக்கப்பட்டுள்ளது.
கனமழைக்கு வடக்கஞ்சேரி, அரிப்பாலம், ஆடுர், ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளில் 8 பேர் இறந்துள்ளனர்.