தலைநகர் தில்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடமாநிலங்களில் பெய்த கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஹரியாணா, உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டிய நிலையில், தில்லியில் உள்ள பல சாலைகளை ஆற்று நீர் மூழ்கடித்துள்ளது.
யமுனை ஆற்றின் நீர்மட்டம் 208.48 மீட்டரை தாண்டியுள்ள நிலையில் அம்மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவிட்டுள்ளது.
தில்லி பழைய ரயில்வே பாலம் மூடப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தலைநகர் முழுவதும் உள்ள பல சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், வாகன ஓட்டுகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வெள்ள நீர் புகுந்ததால் பல இடங்களில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளன. சாலைகளில் போக்குவரத்து ஆமை வேகத்தில் நகர்ந்து வருவதால் மக்கள் குறித்த நேரத்திற்குச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.