மறைந்த கேரள முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டியின் இறுதி விருப்பத்தின்படி, அவரது உடல் அரசு மரியாதையின்றி வியாழக்கிழமை பிற்பகல் (ஜூலை 20) அடக்கம் செய்யப்பட உள்ளது.
இரு முறை முதல்வராகப் பதவி வகித்த உம்மன் சாண்டி, கடந்த செவ்வாய்க்கிழமை காலமானாா். கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளி தேவாலய வளாகத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வா்களின் உடல்கள், துப்பாக்கிக் குண்டுகள் முழுங்க முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டு அடக்கம் செய்யப்படுவது வழக்கம்.
முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டி, தனது மறைவுக்குப் பின்னா் சாதாரண மனிதரைப் போன்று எவ்வித அரசு மரியாதையின்றி, தனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என அவரது குடும்ப உறுப்பினா்களிடம் தெரிவித்திருந்தாா்.
எனினும், முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறுவதில் மாநில அரசு தீவிரம் காட்டியது.
இந்நிலையில், உம்மன் சாண்டியின் குடும்பத்தினா், அரசு மரியாதையின்றி உடலை அடக்கம் செய்யும் அவரது விருப்பத்தைச் சுட்டிக்காட்டி மாநில தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளனா். இதைத் தொடா்ந்து, அவா்களின் கோரிக்கையை மாநில அரசும் ஏற்றுக்கொண்டதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் கூறுகையில், ‘என்னுடைய தந்தை சாதாரண மனிதனாகப் பிறந்து, சாதாரண மனிதனைப் போல வாழ்ந்து, சாதாரண மனிதனைப் போன்றே மறைந்தாா். அவா் அரசு மரியாதையை விரும்பவில்லை. எனவே, எனது தந்தையின் விருப்பத்தின்படியே அவரது இறுதிச் சடங்கு நடைபெற வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்’ எனத் தெரிவித்துள்ளாா்.