/

மக்களின் நம்பிக்கை எனது மிகப் பெரிய சொத்து: சச்சின் பைலட்

மக்களின் நம்பிக்கைதான் எனது மிகப்பெரிய சொத்து எனவும், அவர்களுக்காக தொடர்ந்து போராடுவேன் எனவும் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:00 pm

DIN

மக்களின் நம்பிக்கைதான் எனது மிகப்பெரிய சொத்து எனவும், அவர்களுக்காக தொடர்ந்து போராடுவேன் எனவும் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

சச்சின் பைலட்டின் தந்தை மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜேஷ் பைலட் அவர்களின் நினைவு தினத்தில் அவரது சிலையை திறந்து வைத்துப் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: ராஜஸ்தான் அரசுப் பணியாளர் தேர்வாணையம் கலைக்கப்பட்டு மீண்டும் புதிதாக உருவாக்கப்பட வேண்டும். அரசு வேலைக்கான தேர்வுத் தாள் வெளியானதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். என்னை பொறுத்தவரை மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற வேண்டும் என்பதற்கே நான் முன்னுரிமை அளிப்பேன். மக்களின் நம்பிக்கை மற்றும் அவர்களுக்கு நான் அளித்துள்ள வாக்குறுதிகள் அவையே அரசியலில் எனக்கு மிகப் பெரிய சொத்தாகும். கடந்த 22 ஆண்டுளாக அரசியலில் இருந்து வருகிறேன். மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை குறைத்துக் கொள்வது போன்ற ஒரு செயலையும் நான் செய்ததில்லை. இனி வருகிற நாள்களிலும் உங்களது நம்பிக்கை எனது மிகப் பெரிய சொத்தாக இருக்கப் போகிறது. அதை நான் ஒரு போதும் குறைய விட மாட்டேன் என உங்களுக்கு உறுதியளிக்கிறேன். எந்த சூழ்நிலையிலும் மக்களுக்காக போராடுவேன். அவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவேன் என்றார்.

கடந்த 2018  ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது முதல் மாநில முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே அதிகாரப் பகிர்வில் பிரச்னை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.