சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் பெயரை பாஜக படை என மாற்ற வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கினைப்பாளரும்,தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அரவிந்த் கேஜரிவால் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் பெயரை பாஜக படை என மாற்ற வேண்டும். முன்பெல்லாம் இந்த அமைப்புகளுக்கு நல்ல மரியாதை இருந்தது. அவர்கள் சோதனை செய்யும்போதோ அல்லது கைது செய்யும்போதோ, தவறு நடந்திருக்கும் என்று தோன்றியது. ஆனால், தற்போது இந்த அமைப்புகள் பாஜகவின் அரசியல் ஆயுதங்களாக மாறிவிட்டன எனத் தெரிவித்தார்.
மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் நேற்று நள்ளிரவு வரை அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று அதிகாலை அவரை கைது செய்தனர்.
இந்நிலையில், செந்தில் பாலாஜி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.