ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது.
பிகாரைச் சேர்ந்த பிரகாஷ் ராம், ஒடிசா ரயில் விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில் கட்டாக்கின் எஸ்சிபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இதுதொடர்பாக எஸ்சிபி மருத்துவனை நிர்வாகம் உள்ளூர் போலீஸ் நிர்வாகத்துக்கு தகவல் அளித்துள்ளது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பிரகாஷின் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
மேலும், பலத்த காயமடைந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் கட்டாக்கின் எஸ்சிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் சிலர் உடல் நிலை தேறிய நிலையில் வீடு திரும்பினர். பலத்த காயமடைந்த மேலும் மூவரின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், எய்ம்ஸ் புவனேஸ்வரில் பாதுகாக்கப்பட்ட 81 உடல்களில் அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. மேலும், 78 பேரின் டிஎன்ஏ பரிசோதனைக்குக் காத்துள்ளனர்.
கடந்த ஜூன் 2-ஆம் தேதி பாலாசோர் மாவட்டத்தின் பஹங்கா பஜாரில் அடுத்தடுத்து மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.