தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தலைமையிலான தேர்தல் குழு பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடகத்தின் தயார் நிலை குறித்து ஆராய கர்நாடகத்துக்குச் சென்றுள்ளது.
மூன்று நாட்கள் பயணமாக இந்தக் குழு கர்நாடகத்துகுச் சென்றுள்ளது. இந்தக் குழுவில் தலைமைத் தேர்தல் அதிகாரி தவிர்த்து தேர்தல் அதிகாரிகளான அனூப் சந்திரா மற்றும் அருண் கோயல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிக்க: இம்மாத இறுதிக்குள் குரூப் 4 முடிவுகள்: டிஎன்பிஎஸ்சி
கர்நாடகத்தில் தலைநகரை வந்தடைந்துள்ள இந்தக் குழு கர்நாடக மாநிலத்தின் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியான மனோஜ் குமார் மீனா மற்றும் பிற தேர்தல் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். அதேபோல, பல்வேறு அரசியல் கட்சிகளிடமும் அதன் பிரதிநிதிகளிடமும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. அவர்களது ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் கேட்கப்பட உள்ளன.
அதனைத் தொடர்ந்து அந்தக் குழு சர்வவதேச அளவிலான கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள உள்ளது. இந்தக் கருத்தரங்கில் பல்வேறு நாடுகளின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அதன்பின், நாளை (மார்ச் 10) அனைத்து மாவட்ட துணை ஆணையர்களுன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு அவர்களிடம் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கேட்டறியப்பட உள்ளது.
இதையும் படிக்க: வெற்றிமாறன் என்னை ஏமாற்றிவிட்டார்: விஜய் சேதுபதி
பின்னர், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எல்இடி வாகனங்கள் இயக்கப்பட உள்ளன.
நாளை மறுநாள் (மார்ச் 11) மீண்டும் தில்லி புறப்படுவதற்கு முன்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையிலான இந்தக் குழு பத்திரிகயாளர்களை சந்தித்து பேட்டியளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.