மணிப்பூர் மாநில வாக்காளர்கள் ஒட்டு மொத்தமாக ஏமாற்றப்பட்டுள்ளதாக நினைப்பதாகவும், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சிக்கு வந்து ஓராண்டிலேயே மணிப்பூர் மாநிலம் மோசமான வன்முறைக் கலவரங்களை சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. நமக்கு தருவதாக உறுதியளித்த நல்ல நிர்வாகம் எங்கே போனது. ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே பாஜகவால் மணிப்பூர் மக்கள் மொத்தமாக ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இது மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வருவதற்கான நேரம். எந்த காரணத்துக்காக மாநில அரசினை மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்தார்களோ அது நிறைவேற்றப்படவில்லை எனப் பதிவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக மணிப்பூரில் மைதேயி மற்றும் கூகி ஆகிய இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களிடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வன்முறை கலவரம் வெடித்துள்ளது. இந்த வன்முறை கலவரத்தில் இதுவரை குறைந்தது 54 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.