நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் படித்து 12 ஆம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை(மே 12) வெளியானது.
சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரி 5 முதல் ஏப்ரல் 5 வரை நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தத் தேர்வை 16,96,770 மாணவ மாணவிகள் எழுதினர். இந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மாணவ, மாணிவிகள் தங்களது தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbse.gov.in அல்லது results.cbse.nic.in, cbseresults.nic.in அல்லது digilocker.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
12 ஆம் வகுப்புத் தேர்வு எழுதியவர்களில் ஒட்டுமொத்தமாக 87.33 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 84.67 சதவீதம் பேர், மாணவிகள் 90.68 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 6..01 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 5 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளது.
இது கரோனாவுக்கு முந்தைய 2019 ஆம் ஆண்டு தேர்ச்சி விகிதமான 83.40 சதவீதத்தை விட அதிகம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மண்டலம் 99.91 சதவீதம் தேர்ச்சியுடன் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூரு மண்டலம் 98.64 சதவீதம் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்திலும், சென்னை மண்டலம் 97.40 சதவீதம் தேர்ச்சியுடன் 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
ஏற்கனவே அறிவித்தபடி இந்த முறை முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை. மாணவர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.