மும்பை: குளிர்சாதன பெட்டியை விட மண்பானையே சிறந்தது என்று மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருந்து வரும் ஆனந்த் மஹிந்திரா, தனது சமூக வலைத்தள பக்கங்களில் கண்டுபிடிப்பாளர்களை அடையாளம் கண்டு வாழ்த்துவது, அதனை வடிவமைத்தவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பது மற்றும் கவனத்தை பெறும் வகையில் பதிவுகளை பகிர்ந்து வருவார்.
இந்நிலையில், மண்பானை மற்றும் குளிர்சாதன பெட்டி குறித்த பதிவை தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், வெளிப்படையாகச் சொல்வதானால், அழகியல் பார்வை மற்றும் வடிவமைப்பு ரீதியாக மண்பானையே மேலானது. நம் பூமி கோள்களுக்கு ஏற்றவாறு நேர்மாறையாக உலகம் கவனம் செலுத்தி வரும் சூழலில் மண்பானை நம் வாழ்க்கை முறையில் சிறந்த துணைப் பொருளாக இருக்கும் என ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டுள்ளார்.
மேலும், பானை மற்றும் குளிர்சானை பெட்டியின் விலை, அதன் பயன்பாடு மற்றும் பராமரிப்பு போன்றவற்றை ஒப்பீடு செய்துள்ளார்.
'அக்னிபத்' திட்டத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வந்த நிலையில், மஹிந்திரா நிறுவன அதிபர் ஆனந்த் மஹிந்திரா இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளங்களில், அக்னிபத் போராட்ட வன்முறை வருத்தம் அளிக்கிறது. கடந்த ஆண்டு இத்திட்டம் முன்மொழியப்பட்டபோது நான் கூறியதையே மீண்டும் கூறுகிறேன்.
அக்னி வீரர்கள் பெறும் ஒழுக்கம் மற்றும் திறன்கள் அவர்களை சிறந்த வேலைவாய்ப்பிற்குரியவர்களாக மாற்றும். அத்தகைய பயிற்சி பெற்ற, திறமையான இளைஞர்களை பணியமர்த்தும் வாய்ப்பை மஹிந்திரா குழுமம் வரவேற்கிறது.
கார்ப்பரேட் துறையில் அக்னி வீரர்களுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்பு இருக்கிறது. தலைமைத்துவம், குழுப்பணி மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றுடன் அக்னி வீரர்கள், தொழில்துறைக்கு சந்தைக்கு தேவையான தொழில்முறை தீர்வுகளை வழங்குவார்கள். இது செயல்பாடுகள் முதல் நிர்வாகம் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மை வரையிலான முழு அளவையும் உள்ளடக்கியது என்று ஆதரவாக பதிவிட்டிருந்தார்.
இதேபோன்று கடந்த ஆண்டு அன்னையர் நாளில் கோவை இட்லி அம்மாவுக்கு தனது நிறுவனம் சார்பாக கட்டி முடிக்கப்பட்ட வீட்டை பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா, வளர்ப்பு, அக்கறை, தன்னலமற்றவர் என ஒரு தாயின் நற்பண்புகளின் உருவகமாக இருக்கும் கோவை இட்லி அம்மாவையும், அவருடைய பணியையும் ஆதரிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது என்று தனது பதிவில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.