ராஜஸ்தானின் அதிருப்தி காங்கிரஸ் மூத்த தலைவா் சச்சின் பைலட், ஊழலுக்கு எதிராக மேற்கொண்டுள்ள நடைப்பயணம் இன்றுடன்(மே 15) நிறைவடைகிறது. கடைசி நாளையொட்டி திரளானோர் நடைப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
முந்தைய பாஜக அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில் தற்போதைய காங்கிரஸ் முதல்வா் அசோக் கெலாட் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி கடந்த மாதம் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் சச்சின் பைலட்.
பாஜக முன்னாள் முதல்வா் வசுந்தரா ராஜேவுக்கு ஆதரவாக அசோக் கெலாட் செயல்படுவதாக வெளிப்படையாகவே சச்சின் பைலட் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் ஊழலுக்கு எதிராக 'ஜன் சங்கர்ஷ் யாத்ரா' என்ற பெயரில் 5 நாள்கள் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த மே 11 ஆம் தேதி அஜ்மீரில் இருந்து தொடங்கிய நடைப்பயணம் 125 கி.மீ. தூரத்திற்கு ஜெய்பூா் வரையில் நடைபெறுகிறது. கடைசி நாளான இன்று ராஜஸ்தானின் மஹாபுராவில் இன்று காலை நடைப்பயணம் மேற்கொண்டுள்ள சச்சின் பைலட்டுடன் திரளான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். கமலா நேரு நகர் அருகே மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றிலும் இன்று உரையாற்றுகிறார்.
சச்சின் பைலட்டின் இந்த பயணம் அசோக் கெலாட்டுக்கும் அவருக்கும் இடையேயான மோதலை அதிகப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தானில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.