2006-ம் ஆண்டு பார் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், வழக்குரைஞர்கள் நீதிபதியை மை லார்ட் என்றோ யுவர் லார்ட்ஷிப் என்றோ அழைக்க வேண்டியதில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது எங்கும் நடைமுறையில் இல்லை.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா மூத்த வழக்குரைஞர் அவரது வாதத்தின்போது பயன்படுத்திய ‘மை லார்ட்’ என்கிற வார்த்தையைக் குறிப்பிட்டு, “உங்களுக்கு எத்தனை முறை சொல்வது ‘மை லார்ட்ஸ்’? இப்படி அழைப்பதை நீங்கள் நிறுத்தினால் எனது மாத சம்பளத்தில் பாதியைத் தருகிறேன்” என தெரிவித்துள்ளார்.
அக்.3 புதன்கிழமை, வழக்கமான நீதிமன்ற பணியில் மூத்த நீதிபதி ஏ.எஸ். போபண்ணா உடனான அமர்வில் வழக்குரைஞரின் வாதத்தைக் கேட்ட நீதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | வழக்குகள் ஒத்திவைப்புகள்.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை
”இதற்கு மாற்றாக நீங்கள் ஏன் சார் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது” எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
லார்ட் (கடவுள்) என்கிற வார்த்தை காலனியாதிக்க சொற்பயன்பாடு ஆகும். இது அடிமை முறையின் கூறாகவும் கருதப்படுகிறது.