தேர்தல் ஆணையத்தின் உத்தரவையடுத்து, மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மத்தியப் பிரதேசத்தில் 230 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த நவ. 17 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், அந்த மாநில வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் 76.22 சதவீத வாக்குகள் பதிவாகின.
வாக்குப்பதிவு நாளன்று பிந்த் தொகுதியில் உள்ள கிஷுபுராவில் வாக்குச்சாவடி மையம் 71-ன் கீழ் உள்ள சாவடி எண் 3-ல் சிலர் வாக்குப்பதிவு செய்ததை விடியோ எடுத்துள்ளனர். இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் அந்த ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி இன்று(நவ. 21) கிஷுபுரா வாக்குச்சாவடியில் உள்ள வாக்குச்சாவடி எண் 3-ல் காலை 7 மணிக்குத் தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து வருவதாகவும் பாதுகாப்புப் படையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பிந்த் மாவட்ட ஆட்சியர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.