புதுதில்லி: ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மக்கள் அதிகளவில் வாக்களித்து சாதனை படைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ள நிலையில், கரண்பூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் குா்மீா் சிங் அண்மையில் மரணமடைந்த அடுத்து அந்த தொகுதியை தவிர்த்து மற்ற 199 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மொத்தம் 199 தொகுதிகளில் 1,862 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். அவா்களின் வெற்றி தோல்வியை இன்று வாக்களிக்க தகுதியுள்ள சுமாா் 5.25 கோடி வாக்காளா்கள் நிா்ணயிக்க உள்ளனா்.
18-19 வயதுக்குட்பட்ட 22,61,008 புதிய வாக்காளர்கள் உட்பட 18-30 வயதுக்குட்பட்ட 1,70,99,334 இளம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக மொத்தம் 1,02,290 பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 69,114 போலீசார், 32,876 ராஜஸ்தான் ஊர்க்காவல் படையினர், வனக்காவலர்கள் மற்றும் ஆர்ஏசி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், மேலும் 700 கம்பெனி சிஏபிஎஃப் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். 2.74 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் தோ்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
இந்த நிலையில், மக்கள் அதிகயளவில் வாக்களித்து சாதனை படைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் இந்தியில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் வாக்குச்சாவடிக்கு மாநில மக்கள் அதிகளவில் வந்து தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்தி புதிய சாதனை படைக்க வேண்டும் என அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், முதல்முறையாக வாக்களிக்க இருக்கும் இளம் வாக்காளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என மோடி தெரிவித்துள்ளார்.