
உத்தரகண்ட்: உத்தரகண்ட் சுரங்க விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகளை பிரதமரின் முதன்மைச் செயலாளர் பிரமோத் குமார் மிஸ்ரா நேரில் ஆய்வு செய்தார்.
உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப் பாதை கடந்த 12-ஆம் தேதி ஏற்பட்ட திடீா் நிலச்சரிவைத் தொடா்ந்து இடிந்தது.
இதனால் சுரங்கப் பாதைக்குள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளா்கள், கடுமையான இடிபாடுகளுக்குப் பின்னால் சிக்கிக் கொண்டனா்.
இதையடுத்து 60 மீட்டா் தொலைவுக்கு 80 செ.மீ. விட்டம் கொண்ட குழாயைச் செலுத்தி தொழிலாளா்களை மீட்பதற்கான பணிகள் தொடங்கி நடந்து வந்தன.
குழாயைச் செலுத்துவதற்கு துளையிடப்பட்ட பாதையில் இரும்புக் கம்பிகள் குறுக்கிட்டதால் மீட்புப் பணிகள் தாமதம் ஆன நிலையில், துளையிடும் ‘ஆகா்’ இயந்திரத்தின் பிளேடுகள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டது. இதனால் கிடைமட்டமாக குழாய் செலுத்தும் மீட்புப் பணிகள் முழுவதுமாக முடங்கியது.
தற்போது இயந்திரத்தின் பிளேடுகளை முழுமையாக அகற்றிவிட்டு மீதமுள்ள 10-12 மீட்டர் தொலைவுக்கு பணியாளர்களே குழாயை செலுத்துவதற்கான பணியும், மறுபுறம் செங்குத்தாக 86 மீட்டருக்கு குழாயைச் செலுத்தி தொழிலாளா்களை மீட்பதற்கான பணியும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளர் பிகே மிஸ்ரா, மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா மற்றும் உத்தரகண்ட் தலைமைச் செயலாளர் எஸ்.எஸ்.சாந்து ஆகியோர் மீட்புப் பணி நடைபெறும் இடத்தில் திங்கள்கிழமை காலை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்ட பிரமோத், சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் குடும்பத்தினருடனும் தொலைப்பேசியில் பேசினார்.
இந்த ஆய்வு குறித்த அறிக்கையை பிரதமர் மோடியிடம் பிரமோத் சமர்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.