கேரளத்தில் திங்கள்கிழமை மாலை கடத்தப்பட்ட 6 வயது சிறுமியை காவல்துறையினர் இன்று மீட்டனர்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஓயூர் பகுதியைச் சேர்ந்த அபிஹல் சாரா ரிஷி(6). இவர் திங்கள்கிழமை மாலை டியூசன் முடிந்து தனது சகோதரனுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, இவர்களை பின்தொடர்ந்து சென்ற கும்பல் சிறுமி சாராவை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றது.
பின்னர், சிறுமியின் தாயாருக்கு தொலைபேசி மூலம் அழைத்து உங்கள் மகளை கடத்திவிட்டதாகவும், சிறுமியை விடுவிக்க ரூ.5 லட்சம் கொடுக்குமாறும் கூறியுள்ளார். இரவு 10 மணிக்கு மீண்டும் அழைத்து ரூ.10 லட்சம் தருமாறு மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர்.
இதையும் படிக்க | சிறிது நேரத்தில் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள்: உத்தரகண்ட் முதல்வர்
இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார் முதல்வர் பினராயி விஜயனின் உத்தரவின் பேரில் சிறுமியை மீட்க மாநில முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கொல்லத்தில் உள்ள ஆசிரமமத்தின் மைதானத்தில் சிறுமியை போலீஸார் மீட்டுள்ளனர். தொடர்ந்து, முதலுதவிக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து, சிறுமியை கடத்திய நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.