பிரதமர் நரேந்திர மோடி மத்தியப் பிரதேசத்தில் ரூ.19 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
தேர்தலை சந்திக்க உள்ள மத்தியப் பிரதேசத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 2) செல்கிறார். இந்தப் பயணத்தின்போது மத்தியப் பிரதேசத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதையும் படிக்க: மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு
இது தொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசியதாவது: பிரதமர் நரேந்திரமோடி இன்று குவாலியர் வருகிறார். அவர் ரூ.19 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் 2.21 லட்சம் வீடுகளின் கிரஹப் பிரவேசங்கள் நடைபெறும். 300 கோடி மதிப்பிலான 9 புதிய சுகாதார மையங்கள் அமைக்கப்படவுள்ளது. புதிய தொழில் மையங்கள் உருவாக உள்ளன. விளையாட்டு மைதானம் அமைக்கப்படவுள்ளது. இன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள். மகாத்மா காந்தி எப்போதும் அனைவருக்கும் சிறந்த ஊக்கமளிப்பவராக இருந்து வருகிறார். அவரது பிறந்தநாளில் பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்த உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது என்றார்.