தில்லி: காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளன. அதற்கு முன்னதாக நடைபெறவுள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் வெற்றி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளது.
இந்த நிலையில், வருகின்ற தேர்தலுக்கான இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக செயற்குழுவை காங்கிரஸ் கூட்டியுள்ளது.
தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்டோபர் 9-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், பொதுச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் என மொத்தம் 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.