உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: "வெளிநாட்டு பங்களிப்புகள் ஒழுங்குபடுத்துதல் சட்டப்படி, ராமர் கோயில் கட்டுமானத்துக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் பெறுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அதுபோன்ற நன்கொடைகளை தில்லி பாரத ஸ்டேட் வங்கி பிரதான கிளையில் உள்ள ராமர் கோயில் அறக்கட்டளையின் கணக்குக்கு மட்டுமே அனுப்ப வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை: உயர்நீதிமன்றம்
பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராமர் கோயிலின் குடமுழுக்கு விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும், அவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் என்று ராமர் கோயில் கட்டுமான குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
2020-ஆம் ஆண்டு நடைபெற்ற ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.