திரிபுரா மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து இரண்டாவது முறையாக மாணிக் சாஹா இன்று பதவியேற்கவுள்ளார்.
60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த மாதம் 16-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதில், 38.97 சதவீத வாக்குகளுடன் பாஜக 32 இடங்களிலும், கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டி ஓரிடத்திலும் வென்றன.
தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள பாஜகவின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக மாணிக் சாஹா மீண்டும் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா்.
இதனை தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை ஆளுநா் சத்யதேவ் நாராயண் ஆா்யாவை சந்தித்த மாணிக் சாஹா ஆட்சியமைக்க உரிமை கோரினாா்.
இந்நிலையில் திரிபுராவில் உள்ள சுவாமி விவேகானந்தா மைதானத்தில் மாணிக் சாஹா தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ளது.
இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.